சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்களால் சென்னை புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகரில் தங்கி பணி புரிபவர்கள், பள்ளி, கல்லூரி படிப்பவர்கள், சென்னையில் தங்கி வேலை பார்க்கும் நபர்கள் என லட்சக்கணக்கானவர்கள் கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.இந்நிலையில், இன்றும் சென்னையில் இருந்து தனியார் வாகனங்கள், அரசு பேருந்துகளில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இந்த வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயணிப்பதால் சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் என ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றன. நாளை காலை வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Be the first to comment