வேலூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாத் டப்பில் குளிக்கும் விநாயகர், அக்னி விநாயகர், ஆஞ்சநேயர் விநாயகர் என பக்தர்களைக் கவரும் வண்ணம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலூரில் பல்வேறு தனித்துவமான விநாயகர் சிலைகள் பக்தர்களைக் கவரும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சார்ப்பனாமேடு பகுதியில் ஆஞ்சநேயர் வடிவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.இந்த சிலைக்கு வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மகளிருக்கு சேலைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.அதேபோல் கொசப்பேட்டையில் உள்ள சுந்தரேச சுவாமி மாணியம் தெருவில், பாத் டப்பில் ஹாயாக குளிப்பதைப் போல் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை, அங்கு வந்த பக்தர்களை வெகுவாக ஈர்த்தது. மேலும், தெரப்பாடி நடவாழி அம்மன் கோயிலின் அருகில் சூரனை வதம் செய்யும் அக்னி விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதுபோன்று, வித்தியாசமான சிலைகள் அனைத்தும், பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதனால், அதிகளவில் பொதுமக்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
Comments