தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு ஐப்பசி மாதத்தை முன்னிட்டு சனி பிரதோஷம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தஞ்சை பெரியக்கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில், பெரியகோயிலில் வீற்றிருக்கும் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அதைப்போல் இன்று (அக் 18) ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவு, மஞ்சள், தேன், பால், தயிர், பழ வகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், நந்தியம் பெருமானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷம் வழிபாட்டை பக்தர்கள் கண்டால், சகல ஐஸ்வர்யங்களும் அவர்களுக்கு கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். ஆகையால் இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Be the first to comment