வேலூர்: வேலூரில் நடைபெற்ற ‘நமோ கோப்பை’ மாரத்தான் போட்டியில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உற்சாகமாக ஓடினர்.வேலூரில் ‘நமோ இளைஞர்கள் மற்றும் திறன் மேம்பாட்டு அறக்கட்டளை’ சார்பில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இலக்காகக் கொண்டு, ‘நமோ கோப்பை’ மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று ஓடினர். இதனை பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி துவக்கி வைத்தார். வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய இப்போட்டி, அண்ணா சாலை வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு கடந்து தொரப்பாடி பகுதியில் நிறைவடைந்தது.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தியாயினி, "மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் உள்ள தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருவதே கேலோ இந்தியா 'Khelo India' திட்டத்தின் மூலம் முக்கிய நோக்கமாகும்" என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்தியாவின் தூண்களாக விளங்கும் இளைஞர்களின் ஆர்வத்திற்கும், திறமைக்கும் இந்த மாரத்தான் போட்டி ஒரு சான்றாக அமைந்துள்ளது என்றும், ‘நமோ ட்ராஃபி’ போன்ற முயற்சிகள் இளைஞர்களின் உடல் தகுதியையும் தனிப்பட்ட ஈடுபாட்டையும் மேம்படுத்தும்" என்றும் அவர் கூறினார்.
Comments