சென்னைக்கு வந்திறங்கிய ஆங்கிலேயர்கள் 1644-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டி முடித்தார்கள். கோட்டையை ஒட்டி வெளியில் உருவான குடியிருப்புப் பகுதி கறுப்பர் நகரம் என்றழைக்கப்பட்டது. இடையில் ஆங்கிலேயர்களைத் தாக்கிய பிரெஞ்சுப் படையினர் கோட்டையைக் கைப்பற்றினர். மூன்று ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்கள் கையில் கோட்டை இருந்தது. அதன்பிறகு இருதரப்புக்கும் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயரிடம் கோட்டை வந்தது.
கோட்டை மீண்டும் தங்கள் கையைவிட்டுப் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆங்கிலேயர்கள் அதன் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். கோட்டையை ஒட்டி நெருக்கமாக அமைந்திருந்த 8,700 வீடுகளைக் கொண்டிருந்த கறுப்பர் நகரம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றி குறிப்பிட்ட தூரத்துக்கு எந்தக் கட்டுமானங்களையும் உருவாக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அந்த எல்லையைக் குறிக்கும் வகையில் 13 ஸ்தூபிகள் நிறுவப்பட்டன. அந்த ஸ்தூபிகளில் ஒன்று மட்டும் ‘1 ஜனவரி 1773’ என்ற நாட்குறிப்பைச் சுமந்துகொண்டு இன்றைய டேர் மாளிகையின் கீழ் நிற்கிறது.
கோட்டைக்கு வெளியே பரந்து விரிந்த காலியிடம் ஒரு பக்கம், நகரம் மறுபக்கம் என்று வளர்ந்த இந்தப் பகுதியில் நீண்டு சென்றது ஒரு சாலை. இந்த காலியிடத்துக்கும் சாலைக்கும் எஸ்பிளனேடு என்று பெயர்.
கிழக்கில் இன்றைய ராஜாஜி சாலையில் தொடங்கி, மேற்கே வால்டாக்ஸ் சாலையில் முடியும் எஸ்பிளனேடு கடந்த நூற்றாண்டில் நகரின் முதன்மை வணிக மையமாக விளங்கியது. தொடக்கம் முதலே மக்கள் நெருக்கம் மிகுந்திருந்த இப்பகுதி 1860-களில் உயர் நீதிமன்றம் வந்தபிறகு முகம் மாறியது.
CREDITS Script & Producer: S Arun Prasath Camera: Suresh Kumar R Edit: Sathya Karuna Murthy Voice: Ve. Neelakandan