எல்லோரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் 31ஆம் தேதி ரஜினி அறிவிக்கப்போகிறார் என்று தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் நக்கலடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவே மாட்டார் என அவர் அடித்து கூறினார். அவர் 31ஆம் தேதி அரசியலுக்கு வர மாட்டேன் என்றுதான் அறிவிக்கப்போகிறார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.
மேலும் அனைவரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் ரஜினி 31ஆம் தேதி அறிவிக்கப் போகிறார் என்றும் நாஞ்சில் சம்பத் நக்கலடித்தார். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பியிருப்பவர்கள் ஏமாறப்போகிறார்கள் என்றும் அவர் கூறினார்.