தஞ்சாவூர்: 18 பெருமாள் (கிருஷ்ணர் ) நவநீத சேவை (வெண்ணெய்தாழி உற்சவம்) வெகுவிமரிசையாக இன்று நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெருமாள் கோயில்களில் 18 நவநீத சேவை வழிபாடு இன்று (ஜூன் 7) சிறப்பாக நடைபெற்றது.தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை புறப்பாடும், அதனை தொடர்ந்து, மறுநாள் நவநீத சேவை (வெண்ணெய்தாழி உற்சவம்) நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 27 பெருமாள்கள் கருட சேவை புறப்பாடு நேற்று நடைபெற்றது. இதையடுத்து, இன்று 18 பெருமாள் (கிருஷ்ணர் ) நவநீத சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை கோயிலில் இருந்து திவ்யதேச பெருமாள்களுடன் பல்லக்குகளில் புறப்பட்டு ஸ்ரீ நீலமேக பெருமாள், ஸ்ரீ நரசிம்ம பெருமாள், ஸ்ரீ மணிகுன்ன பெருமாள், ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள், ஸ்ரீ யாதவ கண்ணன், ஸ்ரீ ரெங்கநாத பெருமாள், ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வரதராஜ பெருமாள் உள்ளிட்ட 18 பெருமாள் கோயில்களிலிருந்து கிருஷ்ணர் வெண்ணெய் குடத்துடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முன் அலங்கார சேவை மற்றும் பின் கூந்தல் அலங்கார சேவையுடன் மாட்டு வண்டியில் புறப்பட்டு தஞ்சை நகரின் முக்கிய ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய தேரோடும் ராஜ வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர்.இந்த வெண்ணெய்தாழி உற்சவத்தில் பஜனை பாடல்களை பாடியபடி பக்தர்கள் சென்றனர். நவநீத சேவையை ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments