வேலூர்: வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வந்தது. இந்த நிலையில், நேற்று திடீரென வேலூர், காட்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், அப்பகுதி மக்கள் வெயில் தாக்கத்திலிருந்து ஓரளவு நிம்மதியடைந்தனர்.மேலும், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (ஏப்.4) காலை 8.30 மணி முதல் இன்று (ஏப்.5) காலை 8.30 மணி வரை சராசரியாக 11.12 மி.மீ மழையும், அதிகபட்சமாக காட்பாடி அருகே பொன்னையில் 52.20 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, காட்பாடி ரயில்வே நிலையத்தில் 10 மி.மீ, திருவலம் சுகர் மில் பகுதியில் 5.20 மி.மீ, வேலூர் தாலுகா அலுவலகத்தில் 17.20 மி.மீ, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 8.80 மி.மீ, குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் 7.40 மி.மீ, மொர்தானா அணையில் 16 மி.மீ, மேலாலத்தூரில் 2.60 மி.மீ, கே.வி.குப்பம் தாலுகாவின் ராஜதோப்பு அணைப் பகுதியில் 14 மி.மீ என மொத்தமாக 133.40 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments