மூணாறு: கால்நடைகளை வேட்டையாடியும், மக்களை அச்சுறுத்தியும் வந்த புலியை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு தலையார் எஸ்டேட் பாம்பன்மலை என்ற இடத்தில், கடந்த 3 மாதங்களாக புலி ஒன்றின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். அது மட்டுமின்றி, மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளையும் அந்த புலி வேட்டையாடி வந்ததாகக் கூறப்பட்டது. இதனால், புலியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.அதனால், மக்களை அச்சுறுத்தி வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அதற்காக, கூண்டும் அமைத்தனர். ஆனால், புலி வனத்துறை வைத்த கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. இதற்கிடையே, வழக்கம் போல் மேய்ச்சலுக்கு விடப்பட்ட பசுமாடு ஒன்றை புலி வேட்டையாடியது கண்டறியப்பட்டது.எனவே, மீண்டும் அதே இடத்திற்கு புலி வரக் கூடும் என்பதால், வனத்துறையினர் வைத்த கூண்டை இடம் மாற்றினர். இந்த நிலையில், வனத் துறையினர் திட்டமிட்டபடி, பசு வேட்டையாடப்பட்ட இடத்திற்கு வந்த புலி அங்கு வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது. தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு, புலி வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.பொதுமக்களை அச்சுறுத்தியதோடு, கால்நடைகளையும் வேட்டையாடி வந்த புலி பிடிக்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Comments