தஞ்சாவூர்: கும்பகோணத்தில் த.மா.கா போட்டியிடுவது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ’கும்பகோணத்தை இலை ஆள வேண்டும்’ என போஸ்டர் ஒட்டப்ப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கும்பகோணம் தொகுதி, கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் எம்.கே.ஆர்.அசோக் குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலைமை பரிசீலிக்க வேண்டும், ’கும்பகோணத்தை இலை ஆள வேண்டும்’ என்ற வாசகங்களுடன் ஜெயலலிதாவின் விசுவாசிகள் என்ற பெயரில் இன்று கும்பகோணம் மாநகர் முக்கிய இடங்கள் முழுவதும், ஓட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் தமாகாவிற்கு கும்பகோணம் தொகுதி ஒதுக்கப்பட்டு, தற்போது அதற்கு அதிமுக மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழ்நிலையில், இங்கு களம் காணும் தமாகா வேட்பாளருக்கு அதிமுகவின் முழுமையான ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.
Comments