திருப்பத்தூர்: மக்கள் குறை தீர்ப்பு முகாம் சட்டப் பேரவை தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சிவசௌவுந்தரவல்லி தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பான தேர்தல் அட்டவணையைத் அறிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் 1202 வாக்குச் சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4,49,464, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4,61,996 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 139 என மொத்தம் 9,11,599 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், யாரும் உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. எனக்கும் அதே ரூல் தான். அனுமதி மீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் தொடங்கப்படும். பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களுடைய மனுக்களை போடலாம்" என தெரிவித்தார்.
Comments