காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- வீடியோ
  • 6 years ago
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.கே.ஆர்.எஸ். அணை 4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளதால், பாதுகாப்பு கருதி 60 ஆயிரம் கனஅடி உபரிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஏற்கனவே, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள மொத்த நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக உள்ளது.

தற்போது ஒகேனக்கல் அருவிக்கு வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், கர்நாடகா திறந்துள்ள கூடுதல் தண்ணீர் இன்று மாலைக்குப் பிறகு ஒகேனக்கல்லுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், காவிரியில் எப்போது வேண்டுமானாலும் கூடுதல் தண்ணீர் வரலாம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது வினாடிக்கு 45 ஆயிரத்து 316 கன அடியாக உள்ளது. நேற்று காலை 79 அடியாக இருந்த அணை நீர்மட்டம், ஒரே நாளில் 4 அடி உயர்ந்து, 83 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் 45 புள்ளி இரண்டு இரண்டு டி.எம்.சி. நீர் உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

காவிரி ஆற்றில் கர்நாடகா திறந்துள்ள உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால், நாளை காலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். இதனால், காவிரி கரையோர மக்களுக்கு மேட்டூர் முதல் எடப்பாடி வரை, ஒகேனக்கல் முதல் காவிரி வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அவசர உதவிக்கு 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

des: One thousand cusecs of water has been opened from Karnataka Dams, flood threat to Cauvery coastal districts in Dharmapuri and Salem districts.
Recommended